×

டாஸ்மாக் கடை திறந்த முதல்நாளில் அரங்கேறிய போதை பயங்கரங்கள்: தந்தையை வெட்டிக்கொன்ற மகன் தங்கையை கொன்றார் அண்ணன்

* கணவர் அடி, உதையால் மகளுடன், மனைவி தீக்குளிப்பு
* மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்தடுத்து சோகம்

அலங்காநல்லூர்: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே கீழகண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி (60). இவரது மனைவி சந்திரமதி (55). இவர்களுக்கு சண்முகவடிவு (27), விஜயா (25), அம்சவல்லி (20) என்ற மகள்களும், கணேஷ்பாபு (23) என்ற மகனும் உள்ளனர். சந்திரமதி, சண்முகவடிவு திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். அம்சவல்லி ராஜபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கணேஷ்பாபு லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.  அம்சவல்லியும், அதே ஊரைச் சேர்ந்த முருகேசபாண்டியனும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். இதற்கு கணேஷ்பாபு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் ஒரு மாதத்திற்கும் மேலாக டாஸ்மாக் கடை மூடியிருந்ததால் அமைதியாக இருந்த கணேஷ்பாபு, நேற்று கடை திறந்ததும், மது அருந்தி விட்டு முழு போதையில் வீடு திரும்பினார். தங்கை அம்சவல்லியிடம் காதல் விவகாரம் பற்றி பேசி தகராறில் ஈடுபட்டார்.வாக்குவாதம் முற்றியதில் கட்டையால் கொடூரமாக தாக்கியதில் அம்சவல்லி பரிதாபமாக உயிரிழந்தார்.  கதப்பி ஓடிய கணேஷ்பாபுவை திருச்சுழி போலீசார் தேடி வருகின்றனர். தந்தை கொலை: விருதுநகர் மாவட்டம்,  ராஜபாளையம் அருகே சேத்தூர் அம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் லட்சுமண
பெருமாள் (80). இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். 4வது மகன் குருவையா (45) வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இவரது மனைவி குருபாக்கியம், இரண்டு குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். குருவையாவுக்கும், தந்தை லட்சுமணபெருமாளுக்கும் சொத்து பிரச்னையில் தகராறு இருந்து வந்தது. நேற்று மாலை டாஸ்மாக் கடைக்கு சென்று போதையில் திரும்பிய குருவையா வீட்டின் முன் அமர்ந்திருந்த லட்சுமணபெருமாளிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் உயிரிழந்தார். சேத்தூர்போலீசார் குருவையாவை கைது செய்தனர். தாய், மகள் தீக்குளிப்பு: மதுரை அருகே அலங்காநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (40). கட்டிடத் தொழிலாளி. இவர் நேற்று காலையிலேயே இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று காத்திருந்து மது பாட்டில்களை வாங்கி வந்தார்.

வாங்கி வந்த மது முழுவதையும் குடித்து, கடும் போதைக்கு ஆளானார். வீட்டுக்கு வந்த சிவகுமார், மனைவி பரமேஸ்வரியை (37) அடித்து உதைத்தார். தடுத்த மகள் அர்ச்சனாவையும் (18) தாக்கினார். 10ம் வகுப்பு படித்து வரும் மகன் அமர்நாத் வெளியில் சென்றிருந்தார். போதையில் கணவரின் தாக்குதலால் மனமுடைந்த பரமேஸ்வரி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு, ‘மதுவை விடாவிட்டால் தீக்குளிப்பேன்’ என்று மிரட்டினார். தொடர்ந்து அவர் தகராறு செய்ததால் மகள் அர்ச்சனா, மீதி இருந்த மண்ெணண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை சற்றும் எதிர்பாராத பரமேஸ்வரியும், தாவி மகளை பிடிக்க,அவர் மீதும் தீ பரவியது. தீயில் கருகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 80 சதவீதத்திற்கும் மேல் கருகிய நிலையில், அர்ச்சனாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அர்ச்சனா இப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரியில் நண்பர் கொலை: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே திருமங்களம் ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் விஜயன் (45). கூலித்தொழிலாளி. அதேபகுதியை சேர்ந்த பாபு (40). நண்பர்களான இருவரும் நேற்று மது குடித்தனர். போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பாபு கட்டையால் தாக்கியதில் விஜயன் சுருண்டு விழுந்து இறந்தார். இது குறித்து எருமாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சியில் மாட்டு வண்டிக்காரர் கொலை: திருச்சி மாவட்டம் குழுமணி அருகே பேரூர் கீழத்தெருவை சேர்ந்தவர் காத்தான் மகன் ரஞ்சித்குமார் (20). மாட்டு வண்டிக்காரர். இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசித்த அண்ணன், தம்பியான வெங்கட் (22), கோபி (20) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்தநிலையில், அப்பகுதியில் நேற்று மது குடித்துவிட்டு ரஞ்சித்குமார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அதேபோல போதை ஏற்றிக்கொண்டு வந்த வெங்கட், கோபி ஆகியோர் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரி வெட்டி கொன்றனர். இருவரையும் ஜீயபுரம் போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் மது குடித்த தொழிலாளி சாவு
திருச்சி பெரியகடை வீதியில் டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கிய 40 வயது மதிக்கதக்க ஒருவர், குடித்துவிட்டு கடை அருகிலேயே நேற்று மாலை வரை மயங்கி கிடந்தார். வெகு நேரமாக அவர் அசைவின்றி கிடந்ததால் அவ்வழியாக சென்றவர்கள் கோட்டை போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து பார்த்த போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தியதில், இறந்தவர் சரவணன் (40) என்பதும் கடந்த 3 ஆண்டுக்கு முன் டாஸ்மாக் அருகே உள்ள பாலாஜி பவன் என்ற ஓட்டலில் வேலைக்கு சேர்ந்ததும் தெரியவந்தது. இறந்தவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Task Shop ,brother , Task Shop, Murder, Father, Son, Sister, Brother
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...